சனி, 18 ஜூன், 2011

WINDOWS XP யை விட சிறந்த operating systems

இன்னும் பன்னாட்டளவில், கம்ப்யூட்டர்களில் பயன்படுத்தும் ஆப்பரேட்டிங் சிஸ்டங்களில், விண்டோஸ் எக்ஸ்பி முதலிடம் கொண்டுள்ளது. விண்டோஸ் 7 கூடுதல் வசதிகளுடன், நவீன தொழில் நுட்பத்தில் இயங்குவதாக இருந்தாலும், கூடுதல் ஹார்ட்வேர் தேவை, சில புரோகிராம்களை ஏற்றுக் கொள்ளா நிலை, புதிய வகையிலான இன்டர்பேஸ் எனப் பல தடைகளை விண்டோஸ் 7 கொண்டுள்ளதால், பெரும்பாலானவர் கள் விண்டோஸ் எக்ஸ்பியையே (55%)தொடர்ந்து பயன்படுத்தி வருகின்றனர். பல நிறுவனங்கள் கூட, விண்டோஸ் 7 தொகுப்பிற்கு மாறினால், அதிக செலவாகும் என்ற நிலையில், தங்கள் பெர்சனல் கம்ப்யூட்டர் பணியினை விண்டோஸ் எக்ஸ்பி கொண்டே முடிக்கின்றனர். இன்னும் இது நன்றாகச் செயல்பட்டுக் கொண்டுள்ளதே என்பது அவர்களின் வாதம். ஆனால், மைக்ரோசாப்ட் விடாப்படியாக, எக்ஸ்பியை முடிவுக்குக் கொண்டு வரும் வேலையில் இறங்கியுள்ளது.
இது குறித்த பலத்த விவாதங்கள் கம்ப்யூட்டர் தொழில்நுட்ப வல்லுநர் களிடையே நடந்து வருகிறது. இன்னும் விண்டோஸ் எக்ஸ்பி சிறப்பாகச் செயல் படுகிறது என்பதற்காக, அதனையே பின்பற்ற வேண்டியதில்லை. மோர்ஸ் முதலில் கொடுத்த, தந்தி அனுப்பும் மோர்ஸ் கோட் கூடத்தான் இன்னும் நன்றாகச் செயல்பட்டு பயன் தந்து கொண்டிருக்கிறது. அதற்காக, அதனையே வைத்துக் கொண்டிருக்க முடியுமா என்று கேட்கின்றனர். விண்டோஸ் எக்ஸ்பியைக் காட்டிலும், விண்டோஸ் 7, மேக் ஓ.எஸ். எக்ஸ் மற்றும் லினக்ஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டங்கள் மிகச் சிறப்பான பயன்பாட்டினைத் தருகின்றன. இவை கூடுதல் பாதுகாப்பு கொண்டவை; இவை அனைத்தும் நவீன ஹார்ட்வேர் மற்றும் சாப்ட்வேர் தொழில்நுட்பத்தினைக் கையாண்டு, நமக்கு அதிக பயன்களைத் தருகின்றன.
கடந்த சில ஆண்டுகளாக, ஸ்மார்ட் போன்களும், டேப்ளட் பிசிக்களும் பயன்படுத்தப்படுவது அதிகரித்து வருகிறது. குறிப்பிட்ட நேரத்தில் தான் அலுவலக வேலை பார்ப்பது என்றில்லாமல், நாம் விரும்பும் நேரத்தில் பணியாற்ற இவை துணை புரிகின்றன. இதனால், இவை எந்நேரமும் நெட்வொர்க் கில் இணைக்கப்பட்டே உள்ளன. இந்த சாதனங்கள் எதிலும் விண்டோஸ் எக்ஸ்பி இயங்குவதில்லை. வேலை நடை பெறாமலா இருக்கிறது என்று இந்த வல்லுநர்கள் கேட்கின்றனர்.
அடுத்தது, மாறினால் செலவு அதிகம் என்பது. உண்மை என்னவென்றால், மாறாவிட்டால்தான் அதிகம் செலவு. தொடக்கத்தில் செலவு சற்று அதிகமாக இருந்தாலும், தொடர்ந்து நாம் நம் ஊழியர்களுக்கு நவீன தொழில் நுட்பத்தினைத் தந்தால்தான் அவர்கள் நல்ல முடிவினை நமக்குத் தர முடியும். மேலும் வர்த்தகம், அலுவலகம் என்று வருகையில், நம்முடன் போட்டியில் உள்ளவர்கள், நவீன தொழில் நுட்பத்திற்கு மாறுகையில், நாமும் மாற வேண்டியது நல்லது தானே.
சிலர் தாங்கள் உருவாக்கிய அலுவலகத் திற்கான சாப்ட்வேர் தொகுப்புகளை மாற்றி அமைக்கத் தயங்கி, இன்னும் விண்டோஸ் எக்ஸ்பி தொகுப்பினையே பயன்படுத்தி வருகின்றனர். இது மேம்போக்காகச் சரி என்றாலும், முன்னேற்றத்தினைக் கருதி, பழையதே போதும் என்ற எண்ணத்தைக் கைவிட்டு மாற வேண்டும்.
மைக்ரோசாப்ட் வரும் 2014ல் எக்ஸ்பிக்குத் தரும் ஆதரவினை முற்றிலுமாக நிறுத்த இருக்கிறது. எக்ஸ்பி இயக்கத்தில் எந்த சாப்ட்வேர் புரோகிராமும் தயாரிக்கப்பட மாட்டாது. இதனால், தொடர்ந்து எக்ஸ்பியையே பயன்படுத்தி வந்தால், போட்டியில் நாம் தூசிக்குச் சமமானவர்களாக மாறிவிடுவோம் என்று பலர் எச்சரிக்கை தந்துள்ளனர்.
மேலும் அண்மையில் மைக்ரோசாப்ட் வெளியிட்ட இன்டர்நெட் எக்ஸ்புளோரர் தொகுப்பு 9, எக்ஸ்பியில் இயங்கா நிலையில் வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்து, பரவலாக எதிரான கருத்துக்கள் வந்தாலும், மைக்ரோசாப்ட் இந்த முடிவிற்கு வருந்துவதாகத் தெரிய வில்லை. தன் முடிவில் மிக உறுதியாக நிற்கிறது. பத்தாண்டுகளுக்கு முன்னால் உருவாக்கப்பட்ட ஒரு சிஸ்டத்தின் அடிப்படையில், இனிமேல் எதுவும் புதிய ஒன்றை அமைக்கக் கூடாது என்று இன்டர்நெட் எக்ஸ்புளோரர் தொகுப்பினை உருவாக்கிய குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.
ஆனால் இந்த ஒன்றைத் தான் கூகுள் மற்றும் பயர்பாக்ஸ் வழங்கும் மொஸில்லா ஆகிய நிறுவனங்கள் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டன. தங்களின் புதிய பிரவுசர்கள், விண்டோஸ் எக்ஸ்பியிலும் செயல்படும் வகையில் அமைத்துள்ளனர். இதனால், பலர் இன்டர்நெட் எக்ஸ்புளோரரிலிருந்து இந்த இரண்டு பிரவுசர்களில் ஒன்றுக்கு மாறும் சூழ்நிலை ஏற்பட்டு வருகிறது. இருப்பினும் மைக்ரோசாப்ட் தன் நிலையிலிருந்து மாறுவதாக இல்லை. மக்கள் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 9 மற்றும் விண்டோஸ் 7 செயல்பாடுகளைக் கண்டு, எக்ஸ்பியை விட்டு வெளியேறுவார்கள் என்று உறுதியாக நம்புகிறது.

1 கருத்து: