வியாழன், 30 ஜூன், 2011

விண்டோஸ் ஆன்லைன் ட்ரைவ்

என்னதான் ஹார்ட் டிஸ்க்கின் விலை மிகவும் குறைவாக இருந் தாலும், நாம் அதில் பதியும் பைல்களின் அளவு அதிகரித்துக் கொண்டு தான் உள்ளது. சில நெருக்கடியான வேளைகளில் எந்த பைலை அழிப்பது, எந்த பைலை வைத்துக் கொள்வது என்று முடிவெடுக்க முடியாமல் குழப்பமடை கிறோம். இது போன்ற நேரங்களில் நமக்கு உதவிட பல ஆன்லைன் தளங்கள் உள்ளன. இங்கு சென்று நம்முடைய பைல்களை சேவ் செய்து வைக்கலாம். இப்படி பல தளங்கள் இருந்தாலும் இவற்றில் சில கட்டுப்பாடுகள் இருக்கும்.
குறிப்பிட்ட அளவிற்கு மேல் உள்ள பைல்களை அப்லோட் செய்து வைக்க முடியாது. நமக்கு ஒதுக்கப்படும் ஆன்லைன் டிரைவின் அளவு குறைவாக இருக்கும். திடீரென சில மாதங்கள் அல்லது நாட்கள் கழித்து கட்டணம் செலுத்தச் சொல்வார்கள். சில வேளைகளில் அந்த குறிப்பிட்ட சர்வரை அடைய முடியாது. சில நாட்களில் சர்வர் இல்லை என்ற செய்தியும் கிடைக்கும்.
இது போன்ற பிரச்னைகள் எதுவும் இன்றி நமக்கு இந்த வகையில் கிடைப்பதுதான் விண்டோஸ் லைவ் ஸ்கை ட்ரைவ் (Windows Live Sky Drive) வசதியாகும்.
இந்த ட்ரைவில் பைல்களை சேவ் செய்து வைக்க ஒவ்வொருவருக்கும் 25 ஜிபி இடம் தரப்படுகிறது. எனவே இதில் ஏறத்தாழ சராசரியான 1000 டாகுமெண்ட்களை சேவ் செய்திடலாம். 3,000 பாடல்களைப் பதிந்து வைக்கலாம். 10,000 போட்டோக்களை இதில் பாதுகாத்து வைக்கலாம். இதற்கு பாஸ்வேர்ட் பாதுகாப்பு உண்டு. அத்துடன் இந்த பைல்களை மற்றவர்கள் பார்ப்பதற்கும் அனுமதிக்கலாம். பிரைவேட் (Private) என வகைப்படுத்திவிட்டால் நீங்கள் மட்டுமே அதனைக் கையாள முடியும். ஷேர்டு (Shared) என ஒதுக்கினால் மற்றவர்களுடன் பைல்களைப் பகிர்ந்து கொள்ள முடியும். அனைவரும் பார்க்கலாம் என்றால் பப்ளிக் (Public) என வகைப்படுத்த வேண்டும்.
இதனைப் பெற என்ன செய்திட வேண்டும்? http://skydrive.live.com என்ற முகவரியில் உள்ள தளத்திற்குச் செல்லுங்கள். இதில் அக்கவுண்ட் ஒன்றைத் தொடங்கி, ஒரு மெம்பர் ஆக உங்களை ஆக்கிக் கொள்ளுங்கள். பின் அதில் தரப்படும் வழி நடத்தல்களின் படி சென்று பைல்களை அப்லோட் செய்திடலாம். உங்கள் பைல்கள் வைத்திடும் ட்ரைவினை, உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள மற்ற ஹார்ட் டிஸ்க் ட்ரைவ் பிரிவுகளில் ஒன்றாக இயக்கலாம்.
இதனால் நீங்கள் ரகசியமாக வைத்துப் பார்க்க வேண்டிய பைல்களை உங்கள் கம்ப்யூட்டரில் வைக்காமல் ஆன்லைன் ட்ரைவில் வைக்கலாம். உங்கள் அனுமதியின்றி யாரும் பார்த்துவிட முடியாது. இந்த அனைத்து வசதிகளும் இலவசம் என்பது இதன் உன்னத சிறப்பாகும்.

செவ்வாய், 28 ஜூன், 2011

உயிரைப் பறித்த சீன mobile

குஜராத் மாநிலத்தில், பஞ்ச்மஹால் மாவட்டத்தில் வசித்த தஞ்சி தாமூர் என்ற பெயர் கொண்ட 25 வயது வாலிபர், சீன போன் ஒன்றினால் தன் உயிரை இழந்துள்ளார். மிகவும் மலிவான விலையில் கிடைக்கிறது என்பதற்காகத் தரம் குறைந்த சீனாவில் இருந்து இறக்குமதியான மொபைல் ஒன்றை சார்ஜ் செய்தவாறு பேசுகையில் இந்த சோக சம்பவம் நடைபெற்றுள்ளது. அதிக வோல்டேஜ் அளவில் உடம்பில் மின்சாரம் பாய்ந்து உயிரைப் பறித்ததாக, இவரின் உடம்பினைப் பரிசோதனை செய்த மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
போன்களை அடையாளம் காட்டும் தனி எண்கள் இல்லாத மொபைல் போன்களுக்கு இந்திய அரசு தடை விதித்த பின்னரும், மலிவான சீன போன்கள் இன்னும் இந்தியாவில் பல மாநிலங்களில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. பல வசதிகளுடன், மிகக் குறைந்த விலையில் இவை கிடைப்பதால், இவற்றைப் பெரும்பாலான மக்கள், குறிப்பாக கிராமப் புற மக்கள், வாங்கிப் பயன்படுத்துகின்றனர். எந்த தர அடிப்படைக்கும் ஏற்றதாக இந்த போன்கள் இருப்பதில்லை. சீனாவில் ஆயிரக்கணக்கானோர் இது போன்ற போன்களைத் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஷான்ஷாய் போன்கள் எனப் பொதுவாக இவற்றை அழைக்கின்றனர். பிரபல நிறுவனங்களின் போன்கள் போல இந்த போன்கள் தயாரிக்கப்படுவதால், ஆங்கிலம் தெரியாத பலர் இதனால் ஏமாற்றப் படுகின்றனர்.
இந்த போன்களைத் தயாரிக்கும் போதே, சில கெடுதல் விளைவிக்கும் மால்வேர் புரோகிராம்களும் பதிந்தே அனுப்பப் படுகின்றன என்ற குற்றச்சாட்டு எழுந்த போது, சீன அரசு இவற்றிற்கு எதிராக நடவடிக்கை எடுப்பதாக அறிவித்தது. ஆனால் எந்த நடவடிக்கையும் எடுத்ததாகத் தெரிய வில்லை. சென்ற ஆண்டு இதே போல ஒரு பெண், சீன மொபைல் போனால் மின்சாரம் தாக்கி இறந்தது நினைவிருக்கலாம்.